பாலிசி சரண்டர்! ஏன் எதற்கு?

பாலிசி சரண்டர்! ஏன் எதற்கு?




'வச்சு அழுவதைவிட வித்து எழுது’ என்பது வியாபார குடும்பங்களில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழி. இதற்கு என்ன அர்த்தம்?

தெரியாத்தனமாக, போனியாகாதச் சரக்கை வாங்கிவிட்டோம். அதை லாபத்திற்கு விற்க முடியவில்லை. என்றாவது ஒருநாள் அந்த சரக்கு நல்ல விலைக்குப் போகும் என்று கண்மூடித்தனமாக வைத்திருப்பதைவிட, அதை நஷ்டத்திற்கு விற்றுவிட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பதே புத்திசாலித்தனம்.

இந்த அணுகுமுறை நீங்கள் வாங்கிய நிலத்திற்கும், காருக்கும் மட்டுமல்ல, இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் பொருந்தும். நீங்கள் எடுத்திருக்கும் எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுத்துப் பாருங்கள்.

உங்களிடமுள்ள பாலிசிகள், உங்களுடைய எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்றைய நிலையில் உகந்ததாக இருக்கிறதா? அந்த பாலிசியில் முதலீடும் சேர்ந்திருந்தால், அந்த முதலீடு நல்ல வருமானத்தைத் தந்து கொண்டிருக்கிறதா? இந்த முதலீட்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப். போன்ற மற்ற திட்டங்களுக்கு மாறினால், அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா?

இந்த மூன்று கேள்விகளுக் கான பதிலை அடிப்படையாக வைத்தே நீங்கள் எடுத்திருக்கும் பாலிசிகளை தொடர்ந்து வைத்திருக்கலாமா? அல்லது சரண்டர் செய்யலாமா என முடிவு செய்யலாம்.

ஏன் சரண்டர் செய்ய வேண்டும்?



நாம் எடுத்த ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏன் சரண்டர் செய்கிறோம்? நம் தேவைக்கு ஏற்றமாதிரி அந்த பாலிசி இல்லாமல் இருப்பது, அதிகப்படியான பாலிசி கட்டணத்தால் நஷ்டம் ஏற்படுவது, குறைந்தளவு வருமானத்தை ஈட்டுவது போன்ற காரணங்களால்தான் பாலிசிகளை சரண்டர் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
தெரிந்தோ, தெரியாமலோ நாம் எடுத்துவிட்ட இந்த பாலிசிகளை சரண்டர் செய்யும் முன்பு, ஐந்து முக்கியமான கேள்விகளை அவசியம் எழுப்பி, அதற்கான பதிலை கண்டாக வேண்டும். அந்த கேள்விகள் இதோ:

1. பாலிசியை இப்போது சரண்டர் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

2. சரண்டர் சார்ஜ் எவ்வளவு?

3. சில மாதங்கள் காத்திருந்தால் சரண்டர் சார்ஜ் குறை வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

4. பாலிசியை சரண்டர் செய்யாமல் 'பெய்ட் அப் பாலிசி’யாக மாற்றினால் முதிர்வடையும் போது எவ்வளவு தொகை கிடைக்கும்?

5. இந்த பாலிசியை சரண்டர் செய்வதால், நமக்கு எந்த அளவு ஆயுள் காப்பீடு கவரேஜ் குறையும்? அதை சரிக்கட்ட தேவையான அளவு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறோமா?



இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடித்து, பாலிசியை சரண்டர் செய்வதே சரி என்று நீங்கள் முடிவு செய்தால், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?

1. நீங்கள் சரண்டர் செய்த பாலிசி, யூலிப் திட்டமாக இருக்கும் பட்சத்தில் சரண்டர் தொகையை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அப்போதுதான் பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து (பங்குச் சந்தை ஏற்றமடையும் போது) மீள முடியும்.

2. பாரம்பரிய பாலிசியை (ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீணீறீ றிஷீறீவீநீஹ்) சரண்டர் செய்திருந்தால், அதை பி.பி.எஃப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

3. வருமான வரிச் சேமிப்புக்காக எடுத்த பாலிசியை சரண்டர் செய்யும்போது, அந்த பாலிசிக்கு மாற்றாக உங்களுடைய வரிச் சேமிப்பு முதலீட்டை பி.பி.எஃப். அல்லது வரிச் சலுகை அளிக்கும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களில் முதலீட்டைத் தொடரலாம்.

சரண்டர் செய்ய வேண்டிய வேறு சில தருணங்கள்!

1. பணி ஓய்வுபெற்ற பிறகு உங்களுடைய டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய வேண்டும். ரிட்டையர்மென்ட்டுக்குப் பிறகு லைஃப் கவர் தேவையில்லை.



2. ஏற்கெனவே ஏஜென்ட் மூலமாக எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை, ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸில் வேறொரு பாலிசி எடுத்தபிறகு, தொகை எதுவும் கிடைக்காது என்றாலும் சரண்டர் செய்யலாம். காரணம், ஆன்லைன் டேர்ம் பாலிசிகள் ஏஜென்ட் மூலம் எடுக்கும் டேர்ம் பாலிசிகளின் பிரீமியத்தைவிட சுமார் 50% குறைவாக இருக்கும்.

3. நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு இணையாக கவர் செய்ய டேர்ம் பாலிசி எடுத்திருந்தால், கடனை முன்கூட்டியே முடிக்கும்போது, அந்த டேர்ம் பாலிசியை சரண்டர் செய்யலாம்.

சரண்டர் செய்யும்போது நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.